ராணுவ நடவடிக்கையை நிறுத்த இலங்கைக்கு பிரதமர் அறிவுரை

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்கள் என்று சென்னையில் முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, ராஜ்ய சபா எம்பியும், முதல்வரின் மகளுமான கனிமொழி நேற்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த இந்தியா- பிரேசில்- தென் ஆப்ரிக்கா கூட்டு மாநாட்டுக்குப் பின் பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இலங்கையில் இப்போதுள்ள நிலை இந்தியாவை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது தமிழர்- சிங்களர் பிரச்சினைக்கு தீர்வு ராணுவ நடவடிக்கை அல்ல. இதனை ராஜபக்சே அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தை மட்டுமே சரியான சரியான தீர்வு கிடைக்கும். அங்கு நடக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் ஏராளமானவர்கள் வீடுகள் இன்றி அகதிகளாவதும் கவலைக்குரியது.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல், பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அதே சமயம், அங்குள்ள தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கவலை தருகிறது. இதுகுறித்து இலங்கை அரசிடம் ஏற்கனவே நமது வருத்தத்தை தெரிவித்துள்ளோம் என்றார் மன்மோகன் சிங்.
வயலார் ரவி:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை வேண்டி, தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது குறித்து மத்திய அமைச்சர் வயலார் ரவி பேசுகையில், கருணாநிதி தலைமையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின் நகல் இன்னும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை.
ஆனாலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசின், மக்களின் ஆழ்ந்த கவலையை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது. மத்திய அரசு நிச்சயம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.
காங்கிரஸ் ஆதரவு:
இதே கருத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரியும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக நாங்கள் பார்க்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் கருத்துக்களில் எந்த்த் தவறும் இல்லை.
ஆனால்... அபிஷேக் சிங்வி எதிர்ப்பு!:
தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா முடிவு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தியாவின் இறையாண்மை அதிகாரம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை உணர்ந்து யாரும் பேச வேண்டும்.
இலங்கை போன்ற அந்நிய நாடுகளின் இறையாண்மையில் இந்தியா தலையிட முடியாது. வெளிநாடுகள் தொடர்பான விவகாரங்களை மத்திய அரசிடம் விட்டுவிடுங்கள். இதில் உணர்ச்சி வசப்படுவதோ, அநாவசிய வற்புறுத்தல்களோ தேவையற்றது.
இந்த மாதிரி விவகாரங்கலில் மாநில அரசுகள் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. தேவையற்ற குழப்பம்தான் விளைவிக்க முடியும், என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications