எம்பிக்கள் ராஜினாமாவால் பயனில்லை: பாஜக
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறைக்கும், பாஜகவின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் குட்டிக் கதை ஒன்றை கூறி விளக்கினார்.
அந்த குட்டிக் கதை:
ஒரு கணவனும் மனைவியும் தங்கள் குழந்தையோடு கடற்கரைக்கு செல்கின்றனர். தம்பதிகள் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கும்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடல் அலை இழுத்து சென்று மீண்டும் வெளியே வீசி விடுகிறது. குழந்தை மயக்கத்தில் கிடக்கிறது.
அந்த நேரத்தில் கணவன் மனைவியிடம், 'குழந்தை மீது அக்கறை இல்லாமல் இருக்கிறாயே' என்று கடிந்து கொள்ள, அதற்கு மனைவியோ 'உங்களுக்கு அந்த குழந்தை மீது அக்கறை இல்லையா? நீங்கள் அதை பார்த்திருக்க வேண்டாமா?' என்று கூறுகிறாள்.
இந்த நேரத்தில் மனைவிக்கு ஆதரவாக சிலரும், கணவனுக்கு ஆதரவாக சிலரும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் மயக்கமுற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படும் ஒரு நண்பனைப்போல, இலங்கைத் தமிழர் பிரச்சனையை பாஜக அணுகியுள்ளது.
எங்களை பொறுத்தவரை யார், யாருக்கு ஆதரவு என்பது பிரச்சனை இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள் உடனடியாக காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக உள்ளது என்றார்.
எம்பிக்கள் ராஜினாமாவால் பயனில்லை:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன் பேசியதாவது:
மத்திய ஆட்சியில் கடந்த 4 ஆண்டு காலமாக திமுக அங்கம் வகித்து வருகிறது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசும், ஈழத் தமிழர்களின் நலன் காக்க, உரிமைகளை பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக, இலங்கை ராணுவத்திற்கு உதவி செய்ய 256 இன்ஜினீயர்களை அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 இன்ஜினீயர்கள் காயமடைந்தபோதுதான் இந்த உண்மை வெளியே தெரியவந்தது.
இலங்கை பிரச்சினையில் 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இவர்களின் ராஜினாமா முடிவு மத்திய அரசை பாதிக்காது. ஆட்சியும் கவிழாது என்றார்.












Click it and Unblock the Notifications