ஜனாதிபதிக்கு மிரட்டல்-சென்னை சாப்ட்வேர் இன்ஜி. கைது
சென்னை: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புனே சென்ற ஜனாதிபதி பிரதீபாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் அந்த மிரட்டல் இ-மெயில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பபட்டது தெரிய வந்தது.
ஏர்டெல் நிறுவனத்தின் இணைய தள சேவை மூலம் இந்த மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இணையதள முகவரியில் இருந்து பிரதீபாவுக்கு நேற்று முன் தினம் 5 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன.
இந்த மிரட்டல் இ-மெயில்கள் பிரதீபாவின் அலுவலக இணைய தளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை காவல்துறையும், மத்திய பாதுகாப்பு ஏஜென்ஸிகளும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டன. இதில் இருவர் சிக்கினர். இவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைகளுக்கு பிறகு ஸ்ரீராம் ஜெகன்நாத் (23) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் சென்னை உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது தந்தை ஜெகநாத் இறந்து விட்டார்.ஸ்ரீராம் தனது தாயாருடன் சென்னை தியாகராயநகர் ராமேசுவரம் தெருவில் வசித்து வந்தார்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீராமை போலீசார் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டிலும் சோதனை நடத்தினர். பின்னர் ஸ்ரீராம் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்தது.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில்,
என் தந்தை இறந்த பிறகு, நான் மிகுந்த மன அழுத்தத்தோடு காணப்பட்டேன். ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் நடவடிக்கைகள் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. எனது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவே ஜனாதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீராம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.












Click it and Unblock the Notifications