இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம்
பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு எம்.எம்.பல்லம் ராஜு கூறியதாவது:
இலங்கைக்கு உதவிகளும், தளவாடங்களும், ராடார்களும் இந்தியா வழங்கி உள்ளது உண்மைதான்.
இவற்றை வழங்குவதற்கான காரணம், தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாக திகழ்வதை உறுதிப்படுத்துவதற்காகவே.
இதுவும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.
இலங்கையில் மோதல் குறைவதற்கும், இலங்கை அரசும், தமிழர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கும் இந்தியா பாடுபட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் மனித உரிமைகள் பற்றி இந்தியாவும் உணர்ந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications