தொடர் மழை: தூத்துக்குடி கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் ஓடுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நேற்றிரவு விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விளாத்திகுளம் கண்மாய் நிறைந்தது. வைப்பாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிள்ளையார்நத்ததில் உள்ள கண்மாய் பாலம் உடைந்தது. இதனால் எட்டயபுரம், கோவில்பட்டி நெல்லை செல்லும் முக்கிய சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நாகலாபுரம் வழியாக மாற்றி விடப்பட்டது.
பெருநாளி சாலையில் உள்ள விளாத்திகுளம் கண்மாய்க்கு வரும் நீரோடையில் பயங்கர வெள்ள பெருக்கு ஏற்பட்டு ராமநாதபுரம் செல்லும் கமுதி சாலை அடித்துச் செல்லப்பட்டது.
விருசம்பட்டியில் குடிநீருக்காக பயன்படும் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் சுற்றியுள்ள கரிசல்காடுகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. திருவைகுண்டபெருமாள் புரம் ஊருக்குள் உள்ள கண்மாய் உடைந்து அந்த கிராமத்தில் வெள்ளம் புகுந்தது.
அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். ஒட்டப்பிடாரம் குறுக்குசாலை அருகேயுள்ள வேடநந்தத்தில் மழையால் மூன்று வீடுகள் இடிந்தன.
பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தாளமுத்து நகர் அருகேயுள்ள ஆட்டோ டிரைவர் சிவபெருமான் என்பவர் வீடு இடிதாககி கூரை இடிந்து விழுந்தது.
இதில் டிவி, மிக்ஸி ஆகியவை நாசமாகின. அவரது மனைவி சீனியம்மாள், மகன் சந்தன ராஜ் ஆகியோர் மயக்கமடைந்தனர். மேலும் இடி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்ஸி மின்விசிறிகள் நாசமாயின.
25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு:
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பளங்கள் தண்ணீரில் மிதப்பதால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதை நம்பியுள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தீபாவளி வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.