கனடா எம்பி தேர்தலில் 9 இந்தியர்கள் வெற்றி
டோராண்டோ: கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 9 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வென்று எம்பிக்களாகியுள்ளனர். இதில் 7 பேர் ஏற்கனவே எம்பிக்களாக இருந்தவர்கள் ஆவர்.
தேர்தலில் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மொத்தமுள்ள 308 இடங்களில் ஆட்சியமைக்க 155 இடங்கள் தேவை என்ற நிலையில், 143 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வென்றுள்ளது. இருப்பினும் அந்தக் கட்சியே ஆட்சியமைக்கிறது.
இந்தத் தேர்தலில் இந்தியரான தீபக் ஓபராய் ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். ஈஸ்ட் கால்கேரி தொகுதியில் அவர் மீண்டும் வென்றார்.
அதே போல நியூட்டன் டெல்டாவில் சுக் தாலிவாலும், பிராம்ப்டன் ஸ்பிரிங்டேல் தொகுதியில் ரூபி தல்லாவும், மிஸிஸிசெளகா தொகுதியில் நவ்தீப் பெய்ன்ஸ் மூன்றாவது முறையாகவும் வென்றனர்.
பிரமாலியா கோர் மால்டான் தொகுதியில் குர்பாக்ஸ் மால்ஹி 6வது முறையாக வென்றார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான உஜ்ஜல் தோஷான்ஜ் வான்கூவர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். பிலீட்வுட் போர்ட் கெல்ஸ் தொகுதியில் நீனா கெராவால் 3வது முறையாக வென்றார்.
ஷெர்வுட் பார்க் ஸ்டீரீட் தொகுதியில் டிம் உத்பாலும், கால்கேரி நார்த்ஈஸ்ட் தொகுதியில் தேவிந்தர் ஷோரியும் வென்று முதன் முதலாக எம்பிக்களாகியுள்ளனர்.