மத்திய அமைச்சர்-எம்பிக்கள் பயணித்த விமானங்களில் திடீர் கோளாறு!
சென்னை: மத்திய அமைச்சர், எம்பிக்கள் பயணம் செய்த கிங் பிஷ்ஷர் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் நடுவில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமானத்தை விட்டு இறங்கிய கையோடு தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர் பெரும்பாலான பயணிகள்.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் கிங் பிஷ்ஷர் (ஐபி 231) விமானம் நேற்று காலை 6.15க்கு புறப்பட்டது. அதில் மத்திய இணை அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் கார்வேந்தன், ஜே.எம்.ஆரூண் உட்பட 60 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதைக் கவனித்தார் விமானி.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தை உடனே சென்னையில் தரையிறக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த விமானம் காலை 7.15-க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
மற்ற பயணிகள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதாகப் புறப்பட்டது. அதற்குள் பெருமாபாலான பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர்.
இதேபோல் நேற்று அதிகாலை 5 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஐ எக்ஸ் 622) விமானம், 7 ஊழியர்கள், 168 பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
அந்த விமானமும் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 175 பேரும் உயிர்த் தப்பினர்.
பின்னர் மாற்று விமானம் மூலம், பகல் 12 மணிக்கு பயணிகள் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications