வன்னி தமிழர்களுக்கு 750 மெட்ரிக் டன் உணவு பொருள்!
கொழும்பு: புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் நடந்து வரும் வன்னிப் பகுதியில் ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகள் 750 டன் உணவுப் பொருட்களை நேற்று தமிழர்களுக்கு விநியோகித்தன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் கடும் போரில் குதித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற முயன்று வருகிறது.
இதில் அப்பாவி தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க விடாமல் இலங்கை ராணுவம் தடுத்து வருவதாகவும் புகார் நிலவுகிறது.
இப்பிரச்சனையில், அப்பாவித் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு முனைப்பு காட்டத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், நேற்று வன்னிப் பகுதியில் வாழும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்கு 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் இப்பொருட்களை கொண்டு சென்று நேரடியாக வழங்கினர். உலக உணவு திட்டத்தின் கீழ் இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இவை வழங்கப்படுவதை 3 இடங்களில் இருந்து கண்காணித்ததாக கொழும்பில் உள்ள அமெரிக்க அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழனன்றே இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கு வன்னிப்பகுதிக்கு வாகனங்கள் சென்றதாகவும், ஆனால் அங்கு கடுமையான போர் நடந்து கொண்டிருந்ததால் திரும்பிச் செல்ல நேரிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிட ஒத்துழைப்பு அளிப்பதாக ராணுவமும், விடுதலைப் புலிகளும் உறுதியளித்ததை அடுத்து 50 வாகனங்களில் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் கொட்டும் மழையில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.