தப்பிக்க இந்திய தலைவர்களை பயன்படுத்தும் புலிகள்- இலங்கை

இலங்கை வட கிழக்கு பகுதியில் புலிகள் மீது ராணுவம் உச்சகட்ட போர் நடத்தி வருகிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை சுற்றி வளைத்து, ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது.
அக்கராயன் குளத்தைச் சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து ராணுவமும், போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சக்தி வாய்ந்த பீரங்கிகளும், டாங்கிகளும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
அக்கராயன் குளத்தின் மேற்குப் பகுதி வழியாக முன்னேறிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கிழக்கு திசையிலிருந்து தாக்குதலை தொடங்கிய ராணுவ தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் புலிகளின் வசம் இருந்து 3 கி.மீ. பரப்புள்ள இடத்தையும், 19 பதுங்கு குழிகளையும் ராணுவம் கைப்பற்றியது.
இதேபோன்று, வடமேற்கு கடல் பகுதியில் உள்ள முக்கிய கடல் பிரிவுத் தளமான நாச்சிகுடாவை புலிகளிடமிருந்து கைப்பற்ற ராணுவம் முழு மூச்சுடன் போரிட்டு வருகிறது. இந்த தளத்தை இழந்துவிடக் கூடாது என்று புலிகளும் பயங்கர பதிலடி கொடுத்து வருகிறார்கள். முல்லைத் தீவிலும் கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், தாக்குதலை சமாளிக்க முடியாத புலிகள் அதிலிருந்து தப்பிப்பதற்காக தமிழகத் தலைவர்களை கேடயமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
தற்போது நடந்து வரும் போரில் புலிகள் தோல்வி அடைவது நிச்சயம். அவர்கள் தோற்பதை யாராலும் தடுக்க முடியாது. அதனால் போரை நிறுத்துவதற்காக தமிழகத் தலைவர்களை பயன்படுத்தி இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்திக்க புலிகள் முயற்சிக்கின்றனர்.
புலிகள இப்படி செய்வார்கள், இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று இலங்கை அரசு எதிர்பார்த்ததுதான். எனினும், ராணுவத் தாக்குதலில் இருந்து புலிகள் தப்பிக்க முடியாது. ராஜீவ் காந்தி படுகொலையை தமிழக தலைவர்கள் மறக்கக் கூடாது.
இந்தியாவுடன் நீண்ட கால உறவை இலங்கை கொண்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அந்நாடு உதவி வருகிறது. தாய்பூமி பிரச்சனையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டு்ம். இங்கு தமிழர்களை பாதுகாக்கும் முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications