திருச்சி அருகே அதிமுக-தேமுதிக மோதல்
திருச்சி: திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே அதிமுகவினரும், தேமுதிகவினரும் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மருங்காபுரி அருகே உள்ள கருமலையில் அதிமுக 37 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் அதிமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, சென்னைக்கு தேமுதிக இளைஞரணி மாநாட்டிற்கு சென்று விட்டு கருமலை திரும்பிய தொண்டர்கள் சிலர்
சத்தம் போட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் தேமுதிகவினரை வேனில் சென்று துரத்திப் பிடித்தனர்.
அப்போது தேமுதிகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அடிதடியும் ஏற்பட்டுள்ளது.
அங்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள் மீது அதிமுக ஒன்றியச் செயலாளர் சந்திரசேகரன் புகார் செய்துள்ளார். அதே போன்று தேமுதிகவினரும் அதிமுகவினர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.