'இலங்கை': ஆயுதம் ஏந்த தயார்- வைகோ
ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது:
பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன்முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை ஆதரித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர்.
இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மாட்டேன் என்று பிரதமர் எனக்கு அளித்த வாக்குறுதியை நம்பினேன். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார்.
புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்திய ராணுவம் தகர்த்தது. கடற்புலிகளை அழிக்க இந்திய ராணுவம் தகவல் கொடுத்து உதவியது. 4 ஆண்டுகளாக புலிகளை அழிக்க இந்தியா திட்டமிட்டு ராணுவ உதவி செய்துள்ளது. இலங்கையின் இனப் படுகொடுலைக்கு இந்திய ராணுவம் உதவுகிறது.
இந்திய அரசின் துரோகத்திற்கு என்ன தண்டனை?. இலங்கையின் உள் நாட்டு பிரச்னைக்கு இந்தியா ஏன் ஆயுத உதவி செய்கிறது?
தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு. மத்திய அரசு செய்த துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்?.
இலங்கையில் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். அதை தடுத்தது இந்தியாதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இலங்கைக்கு உதவ மறுத்தார். அதற்காக அவருக்கு நன்றி சொல்வோம்.
இலங்கையில் ஒருமைப்பட்டை காக்க இந்தியாவின் ஒருமைப்பட்டை குலைத்து விடாதீர்கள். இந்தியா புலிகளுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டும்.
துன்பியல் நிகழ்வுகளை (ராஜிவ் படுகொலை) பற்றி பேசாதீர்கள். போரை நிறுத்துங்கள். உலகின் அனைத்து நாடுகளும் புலிகளுக்கு தடை போட இந்திய அரசு தான் காரணம்.
இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.
தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம்.
புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும். இலங்கையின் உண்மையான குடிமக்கள் தமிழர்கள் தான். மற்றவர்கள் தான் வந்தேறிகள் என்றார் வைகோ.
கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:
கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசுகையில், புலிகளை பயங்கரவாதிகள் என தமிழ் துரோகிகள் சொல்கின்றனர். அகிம்சை போராட்டத்தில் வெற்றி பெறாததால் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும்.
இலங்கைக்கு அளித்து வரும் ராணுவ உதவியை திரும்பப் பெற வேண்டும். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தனி ஈழத்திற்கு உரிய மரியாதையை தர வேண்டும்.
இந்திய இறையான்மையை பிரதமரும், முதல்வரும் காப்பாற்ற மாட்டார்கள். அனைத்து கட்சிகள் கூட்டத்தின் முடிவின்படி 29ம் தேதி ராஜினாமா கடிதம் யார் கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டதால், திமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை என முதல்வர் கருணாநிதி அப்போது சொல்வார் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் புலிகள் தொடர்பான வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. ஈழத்துக்கு ஆதரவு என்ற பெயரில் கண்ணப்பன் தனி தமிழ்நாடு கோஷத்தையும் எழுப்பியது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.