தொடர் மழை-6 நாட்களாக இருண்டு கிடக்கும் கிராமங்கள்
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் தொடர் மழை காரணமாக கடந்த 6 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில் ஓட்டநாத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து கீழக்கோட்டை, கைலாசபுரம், கொடியன்குலம், ஓட்டநாத்தம், மணியாச்சி, புலியம்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, பாறைக்கூட்டம், பாண்டியாபுரம், தெற்குகாரசேரி, காசிலிங்கபுரம், உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்விநியோகம் பெறுகின்றன.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்னலால் உயர் அழுத்த மின்கம்பிகளுக்கும் டிரன்ஸ்பார்மர்களுக்கும் இடையே பொருத்தப்பட்ட இன்சுலேட்டர்கள் பழுதாகின. மேலும் டிரான்ஸ்பார்மர்களில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கம்பிகளும் பழுதாகின.
இதனை சரி செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். தற்போது ஆறரை மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது. இந்நிலையில் ஓட்டநாத்தம் மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 6 நாட்களாக மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலைகளில் நெல் முளைத்து நாசம்:
பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சோளம், பல்லாரி பயிர்கள் அழுகி நாசமாகி உள்ளது. மழை நீடித்து வருவதால் அரிசி ஆலைகளில் உள்ள நெல்லும் தப்பவில்லை.
மழை பெய்யும் முன் அரிசி ஆலை கலத்தில் காய வைத்து பின்னர் குளிர்வித்து தார்பாயால் மூடிவைக்கப்பட்ட நெல் தற்போது முளைத்து வருகின்றன.
மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூடைகளில் இருக்கும் நெல்களும் மூளையிட்டுள்ளன. இதனால் கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலைகளில் லட்ச கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெல் நாசமாகி உள்ளது. தொடர் மழை நீடித்தால் மேலும் நஷ்டம் ஏற்படும் என்று நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications