தொடர் மழை-நிரம்பும் தென் மாவட்ட அணைகள்
திண்டுக்கல்: தொடர்மழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளின் நீர் மட்ட அளவு அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாறு - பொருந்தலாறு அணை, பரப்பலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை, குடகனாறு அணை, நங்காஞ்சியார் ஆகிய அனைத்து அணைகளிலும் நீர் மட்ட அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கன மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.20 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையிலிருந்து வினாடிக்கு 1,350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதே போன்று, தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் நீர் மட்ட அளவு 58.40 அடியாக அதிகரித்துள்ளது.
மஞ்சளாறு அணையில் நீரின் அளவு 55.40 அடியாக அதிகரித்துள்ளது. இந்த அணையிலிருந்து 284 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் அணைக்கு வருகிற 546 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், பிளவக்கல்லில் உள்ள பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பெரியாறு அணையின் நீர் அளவு 45 அடியாக அதிகரித்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 47.5 அடி ஆகும்.












Click it and Unblock the Notifications