For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி அரசு பதவி விலக வேண்டும்-காங். எம்எல்ஏ

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏவான ஞானசேகரன் கூறியுள்ளார்.

வேலூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு அக்கறை உண்டு.

ஆனால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொன்றகவர்கள் விடுதலைப் புலிகள்.

அங்குள்ள தமிழர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதே அதிகம்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பல அமைப்புகள், நடிகர்கள், இயக்குனர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனித சங்கிலி போராட்டம், பேரணி என்று நடத்தி புலிகளுக்கு ஆதரவு தருகின்றனர்.

ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மறத் தமிழன் என்று புகழ்கிறார்கள்.

இதைக் கண்டு எங்கள் ரத்தம் கொதிக்கிறது. எம்பிக்கள் ராஜினாமா, மனித சங்கிலி என்பதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு உரம் சேர்க்குமேயொழிய அரசியல் தீர்வுக்கு வழிவகுக்காது.

தமிழகத்தை வழி நடத்த வேண்டிய முதல்வர் இந்தப் பிரச்சனை குறித்து பிரதமரிடம் பேசுவதே சிறந்த வழி. அதைவிடுத்து எம்பிக்கள் ராஜினாமா என்று மத்திய அரசை மிரட்டுவது அழகல்ல.

பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் லட்சியம் என்றால் மாநில அமைச்சரவை ராஜினாமா செய்திருக்க வேண்டும். 6 மாதங்களில் காலாவதியாகவுள்ள எம்பிக்கள் ராஜினாமா என்பது கேலிக்கூத்தாகும்.

ராமேஸ்வரத்தில் பேசிய சீமான், அமீர் ஆகியோர் ராஜிவை கொச்சைப்படுத்தியும் பிரபாகரனுக்கு புகழ்மாலை சூட்டியும் பேசியுள்ளனர்.

அவர்களை முதல்வர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவர் அமைதி காக்கிறார் என்று கூறியுள்ளார் ஞானசேகரன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏவான ஞானசேகரன் முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். அவரை விட்டே காங்கிரஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது திமுக-காங்கிரஸ் இடையே மோதல் தீவிரமாகப் போவதையே காட்டுகிறது.

காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் ஞானசேகரன் இவ்வாறு அறிக்கை வெளியிட வாய்ப்பில்லை. தனது அறிக்கை மூலம் கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் கருத்தையே பிரதிபலித்துள்ளார் ஞானசேகரன்.

இதன்மூலம் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அச்சாரம் போட முயற்சிகள் நடப்பதாகவே தெரிகிறது.

ராஜி்வ் கொலையில் நீதி கிடைக்கவில்லை-ராகுல்:

இந் நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீநகர் என்ற இடத்தில் உள்ள பகுகுணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி,

எனது தந்தை ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆனால், 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

அந்தக் கொலைக்காக குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. இருப்பினும், நமது சட்டமுறையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நீதி கிடைக்கும். ஆனால், அதற்கு சற்று காலதாமதமாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X