ராஜஸ்தான்: பட்டாசு விபத்தில் 18 பேர் பலி
பாரதிபூர்: நேற்று நள்ளிரவு பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 வீடுகள் இடிந்தன. இதில் 10 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த கோர விபத்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது
ராஜஸ்தான் மாநிலம் பாரதிபூர் மாவட்டத்தில் டீக் என்ற இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி நெருங்கும் நிலையில் ஏராளமான பட்டாசுகளை தயாரித்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதில் அந்த வீடும், அருகில் இருந்த வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. அதில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் டீக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications