பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார்
கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர்.
செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை காங்கிரஸார் எரிக்க முயன்றனர். போலீஸார் அதை தடுத்து நிறுத்தி எரிக்க கூடாது என்று அனுமதி மறுத்தனர்.
அதற்கு, கட்சி அலுவலகத்துக்குள்தான் கொளுத்துவதாக கூறிய காங்கிரஸார், போலீஸாரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்தனர். அதை அலுவலகத்துக்கு வெளியில் கொண்டு வந்து போட்டனர்.
இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அறிவுடைநம்பி தலைமையில் அங்கு கூடிய அக்கட்சியினர், பிரபாகரன் கொடும்பாவியை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அறிவுடைநம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவு, சிறுவர் எழுச்சி துணை செயலர், தொண்டரணி துணைச் செயலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications