தமிழகத்தில்தான் மின்வெட்டு குறைவு-ஸ்டாலின்
சென்னை: நாடு முழுவதும் மின்தடை பிரச்சனை நிலவி வருவதாகவும், தமிழகத்தில்தான் மின்வெட்டு குறைவாக உள்ளதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா, மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது:
அண்ணா கடந்த 1949ல் திமுகவை தொடங்கும்போது ஒட்டுமொத்த தமிழனத்தை காப்பதற்காகவே இந்த கட்சி என்று அறைகூவல் விடுத்து தோற்றுவித்தார். தேர்தலில் போட்டியிடலாமா என்று 1956ல் திருச்சி மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தி, 1957ல் தேர்தல் களத்தில் இறங்கினோம்.
படிப்படியாக 1967ல் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம். இன்றைக்கு புதிய புதிய கட்சிகள் தொடங்கப்படுகின்றன. புதிய தலைவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் குறைத்து பேச விரும்பவில்லை.
நேற்று முளைத்த காளான்...:
அந்த தலைவர்கள் அடுத்து நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். கட்சி தொடங்குவதற்கு முன்பே முதல்வர் என்கிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஆட்சிக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வர் பதவியேற்றதும், தேர்தல் அறிக்கையிலே சொன்னதையும், சொல்லாததையும் செய்து வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டித்தான் மற்ற மாநிலங்களிலே தேர்தல் அறிக்கை தயாரிக்கிறார்கள்.
மின்வெட்டு எங்கில்லை?:
மின்வெட்டு பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டுமா உள்ளது? இதை சமாளித்து பேச வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது.
நாடு முழுவதும் மின் தடை இருக்கும் நேரத்தில் தமிழகத்தில்தான் மின்வெட்டு குறைவாக இருக்கிறது. எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிய மின் வினியோக கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெளியிட்டோம்.
ஆனால், அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதையும் அரசியலாக்க முயல்கின்றனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று குடியிருப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை முதல்வர் கருணாநிதி ரத்து செய்தார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications