'ஈழத் தமிழர்': ரயில் மறியல்-திருமா உள்ளிட்ட வி.சிறுத்தைகள் கைது
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் செய்தனர். சென்னையில் திருமாவளவன் தலைமையில் ரயில் மறியல் நடந்தது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்திருந்ததை அடுத்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவரை ரயில் நிலையத்தில் நுழையாமல் தடுக்க பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையறிந்த திருமாவளவன் மறியல் நடக்கும் இடத்தை மாற்றினார். பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே தனது தொண்டர்கள் 250க்கும் மேற்பட்டோருடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையறியாத போலீஸார் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் திருமாவளவன் மறியல் செய்ய வருவார் என்று காத்திருந்தனர். இதனால் பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் சுமார் ஒரு மணி நேரம் மறியல் போராட்டத்தை திருமாவளவன் நடத்தினார். இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும், அந்நாட்டுக்கு வழங்கி வரும் உதவியை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் உள்பட 5 ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் சில ரயில்கள் புறப்படாமல் தாமதமாயின.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பேசின் பாலம் ரயில் நிலைய பகுதிக்கு விரைந்து சென்று திருமாவளவன் உள்பட மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு சென்றனர்.
அதே போல திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, நெல்லை, கோவை, மதுரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுமார் 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.
அபாய சங்கிலியை இழுத்து....:
திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர், எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அதிரடி போராட்டத்தில் இறங்கினர்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
பொன்மலை டவுன் ரயில் நிலையத்துக்கு இடையே அரியமங்கலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தை மாநில மாணவர் சங்க பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் 50 பேர் திடீரென ரயிலில் ஏறி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதனால் ரயில் உடன் நிறுத்தப்பட்டது. உடனை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அபாய சங்கிலியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இழுத்து நிறுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபாகரன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். 23 நிமிடத்துக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
கோவையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் மறியலில் கலந்து கொண்டனர்.
அதே போல திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, மதுரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுமார் 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.