சரத்குமார் 150 நாள் தமிழக சுற்றுப் பயணம்
திருச்சி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 150 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 150 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிவார்.
மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதை அனுப்பி தீர்வு காண்பார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் பேசி வருகிறார்.
திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
தேவைபடுமானால் இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.
வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர். எனினும் இதுகுறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை சரத்குமார் எடுப்பார் என்று கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறினார்.