ஹைதி நாட்டுக்கு இந்திய அமைதி காக்கும் படை
{image-Haiti-indian force250_23102008.jpg tamil.oneindia.com}நியூயார்க் (ஐ.நா): 140 இந்தியப் படையினர் உள்ளிட்ட அமைதி காக்கும் படை ஹைதி நாட்டுக்கு ஐ.நாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய படையினர் ஹைதி தலைநகர் போர்ட் அ பிரின்ஸ் நகரில் நிலை கொண்டு செயல்படுவார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியப் படையின் ஒரு பிரிவு ஹைதி வந்து சேர்ந்தது. அக்டோபர் 13ம் தேதி 64 இந்திய அமைதி காக்கும் வீரர்கள் ஐ.நா. குழுவுடன் இணைந்தனர். 2வது பிரிவாக 63 பேர் அக்டோபர் 17ம் தேதி ஹைதி வந்து சேர்ந்தனர்.
இது குறித்து இந்திய படையினருக்கான துணை கமாண்டர் கூறுகையில், ஹைதி நடவடிக்கையில் இந்தியாவுக்கு பங்களித்திருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் தருவதாக உள்ளது. ஹைதிக்கு அமைதிப் படையை அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தவுடன் அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது.
இந்தியப் படையில் இடம் பெற்றுள்ள வீரர்கள் கும்பல்களை சமாளிப்பதிலும், கலவரங்களை அடக்குவதிலும் சிறப்புப் பயிற்சிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதி தலைநகரில் போக்குவரத்தை கண்காணிப்பது, செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பது, கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துவது, குற்றவாளிகளைப் பிடிப்பது உள்ளிட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும் ஹைதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இந்திய வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், ஹைதி தேசிய போலீஸாருக்கு பயிற்சி அளிப்பதிலும் இந்தப் படை ஈடுபடும்.
தற்போது ஹைதியில் 7 நாடுகளைச் சேர்ந்த 1,137 படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்தியப் படை 3வது பெரிய குழுவாக உள்ளனர்.
உலக அளவில் 35 ஐ.நா. அமைதி காக்கும் படையில் 60,000 இந்திய படையினர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications