போதையை விட முடியாத ஏட்டுக்கு கட்டாய ஓய்வு
நெல்லை: மதுப் பழக்கத்தை விட முடியாத தலைமைக் காவலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜபாண்டியன். பேட்டை காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார், இவர் பெரும்பாலும் போதையில்தான் இருப்பார். ஜங்ஷன், டவுண் காவல்நிலையங்களில் பணியாற்றியபோதும் இவர் மீது புகார் எழுந்தது.
கமிஷனர் அவரை அழைத்து ஆலோசனை வழங்கினார். இருப்பினும் நடராஜபாண்டியனால் மது குடிப்பதை நிறுத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு கட்டாய ஓய்வு அளித்த கமிஷனர் உத்தரவிட்டார்.
ரூ.1500 லஞ்சம்- எஸ்ஐ கைது:
இதற்கிடையே கோவில்பட்டியில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவர் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றுகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக பைக் வாங்கினார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி பைக்கில் காளியப்பன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டி மேற்கு போலீஸ் குற்றப்பிரிவு எஸ்ஐ உதிரவாசகம், அவரை நிறுத்தி ஆர்சி புக் உள்ளதா என்று கேட்டார்.
அதற்கு, தான் புதிதாக பைக் வாங்கியுள்ளதாக காளியப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 22ம் தேதி போலீஸ் நிலையத்தில் ஆஜாராகும்படி கூறியுள்ளார். இதையடுத்து 22ம் தேதி காளியப்பன் போலீஸ் நிலையத்திற்கு சென்று எஸ்ஐஉதிரவாசகத்திடம் ஆர்சிபுக்கை காண்பித்தார்.
அதை ஏற்றுக் கொள்ளாத எஸ்ஐ, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.1500 லஞ்சமாக கேட்டார். இதனால் காளியப்பனிடம் அதிர்ச்சி அடைந்தார். பின்னற் 23ம் தேதி (நேற்று) பணம் தருவதாக காளியப்பன் கூறினார்.
இதுகுறித்து காளியப்பன் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி பெருமாள்சாமி தலைமையிலான அதிகாரிகள் எஸ்ஐ உதிரவாசகத்தை நேற்று கண்காணித்தனர்.
நேற்று மாலை 6 மணியளவில் கோவில்பட்டி ஏகேஎஸ் ரோட்டில் வைத்து எஸ்ஐ உதிரவாசகத்திடம் காளியப்பன் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அதை எஸ்ஐ வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. எஸ்ஐ உதிரவாசகம் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.