பேய் மழை... வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

சரியாக பிற்பகல் 3 மணிக்குத் துவங்கிய பெருமழை 5 மணிக்குப் பிறகும் விடாமல் நீடித்தது. வாகன ஓட்டுநர்களுக்கு பாதையே தெரியாத அளவுக்கு அடை மழை பெய்ததால் அண்ணாசாலையே ஸ்தம்பித்துப் போனது. பெரும் இடி, கண்களைப் பறிக்கும் மின்னல் என இயற்கையின் நிஜ முகத்தைப் பார்க்க முடியாமல் நடுங்கிப் போயினர் மக்கள்.
அண்ணா மேம்பாலத்திலிருந்து கத்திப்பாரா வரை வாகனங்கள் மழையில் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஒதுங்கக் கூட இடமின்றி மழையிலேயே நனைந்தபடி நடுச் சாலையில் நின்றனர்.
சைதாப்பேட்டை தொடங்கி வேளச்சேரி வரை நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் பல வாகனங்களின் எஞ்சின்கள் பழுதுபட்டு அப்படியே நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இன்று காலை நல்ல வெயிலடித்ததால் தீபாவளிக்கு பொருட்கள், துணிகள் வாங்க பாரிமுனை, தி.நகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திடீரென பெய்த இந்த மழையால் (கவனிக்க: இன்று மழை பெய்யும் வாய்ப்பிருக்காது, வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார்!) மக்கள் தவித்துப் போயினர். இதனால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் வழக்கம் போல இந்த முறையும் பெருமளவு வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஏரிகளையொட்டி வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கும் மக்கள் இப்போதே தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர்.
பல பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. செல்போன் தொடர்புகளும் கூட சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications