புலிகளுடன் பாமகவுக்கு எந்த உறவும் இல்லை: ஜி.கே.மணி
சென்னை: பாமகவுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்
தமிழக மாணவர் சங்கம் சார்பில் நடந்த பேரணியை தொடங்கி வைத்த ஜி.கே.மணி கூறியதாவது:
தமிழர் பிரச்சனை இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தொடர்கிறது. இந்தியாவில் பல இனம், மொழி, மதம் இருந்தாலும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழர்கள் கீழ்த்தரமாக நடத்துப்படுகின்றனர்.
தமிழர்களுக்குத்தான் ஆதரவு:
இதை எதிர்த்தும், விடுதலைக்காகவும் அவர்கள் போராடுகின்றனர். தார்மீக முறையி்ல் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் விடுதலை போராட்டத்தை ஒர குழு நடத்தும். இலங்கை தமிழர்களை ஆதரிப்பதால் போராளி குழுக்களை ஆதரிப்பதாக அர்த்தமல்ல.
இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ராணுவத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இலங்கை பிரச்சனை இன்னொரு நாட்டு பிரச்சனை என்று மத்திய அரசு சும்மா இருந்துவிடக் கூடாது. இலங்கையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் மீண்டும் அவர்களை குடியமர்த்த அந்நாட்டு அரசு முன் வர வேண்டும்.
விடுதலை புலிகள் தீவிரவாதிகள் அல்ல, போராளிகள் குழு என்று ராமதாஸ் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கண்டனம் நியாயமானது.
ஈழத் தமிழர்களுக்காக விடுதலைப் புலிகள் போராடினாலும், ராஜீவ்காந்தி படுகொலை இந்திய மக்களுக்கு ஆறாத வடு. தமிழ் மண்ணில் அவர் கொலை செய்யப்பட்டது தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பது அனைத்து தமிழர்களின் விருப்பமாகும்.
புலிகளுடன் சம்பந்தம் இல்லை:
பாமகவுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தற்போது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கும் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications