மத்திய அரசின் செயல்பாடு திருப்தியில்லை-ராமதாஸ்
திண்டிவனம்: சென்னையில் நடைபெறும் மனித சங்கிலி அணிவகுப்பில் நான் கலந்து கொள்கிறேன். தமிழ் உணர்வு உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். இதில் வேறுபாடு பார்க்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ். அப்போது அவர் பேசியதாவது:
இலங்கை பிரச்சனை என்பது ராணுவத்திற்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வருகிற சண்டை என்பது மட்டுமல்ல, அது இலங்கையில் தமிழ் பேசுகின்ற 52 லட்சம் மக்களுடைய உரிமைப் பிரச்சனை.
இலங்கையில் சம உரிமை கேட்டு போராடி வரும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ராஜபக்சே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது வேறு ஒரு நாட்டில் நடைபெறுகிற உள் விவகாரம் என்று இந்தியா பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது. உரிமையோடு தலையிட்டு தட்டிக் கேட்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு திருப்தி என கூற முடியாது.
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க மனமில்லை என்றாலும், அவர்களை கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்திற்கு மறைமுகமாக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த கொடுமையை எதிர்க்க முன்வர வேண்டும். அதற்கு மனமில்லாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளையும் வாதங்களையும் எழுப்பி தமிழின உணர்வை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
சென்னையில் நடைபெறும் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே நான் கலந்து கொள்கிறேன். இந்த அணிவகுப்பில் தமிழ் உணர்வு உள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை இதில் காண்பிக்கக் கூடாது.
ஆளும் திமுகவுடன், பாமகவிற்கு கருத்து வேறுபாடுகள், அரசியல் மோதல்கள் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் நலனுக்காக அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு முதல்வர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கிறது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி என்று கூற முடியாது.
இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள், இந்திய அரசின் சார்பாக உணவும், மருந்தும் நேரடியாக இலங்கைக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வந்தால்தான் திருப்தியாக இருப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications