எரிந்த ரயில் பெட்டிகள்-சிறுத்தைகள் மீது சந்தேகம்
மதுரை: மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள் எரிந்ததன் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே யார்டு பகுதியில் ரெயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் மதுரை- சென்னை சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்காக 18 பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று காலை 11 மணியளவில் இதில் 11-வது பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதைத்தொடர்ந்து உட்பகுதியிலும் தீ பிடித்து கரும்புகை கிளம்பியது.
அடுத்த பெட்டியிலும் தீப்பிடித்து புகை வெளியேறியது. அதனால் அந்த பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்தது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடியும் ஒரு பெட்டியைக் காப்பாற்ற முடியவில்லை. முழுமையாக அது எரிந்து போய் விட்டது. இன்னொரு பெட்டி கடும் சேதமடைந்தது.
ரயில் பெட்டியில் தீபிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. நின்று இருந்த பெட்டியில் திடீரென்று தீபிடித்தது எப்படி? ஏதேனும் நாசவேலையா? மர்ம நபர்கள் யாரும் தீ வைத்தார்களா? என்று ரயில்வே போலீசார் செய்து விசாரித்து வருகிறார்கள்.
நேற்று தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திண்டிவனம் வந்தபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் அங்கு வந்து ரயிலின் டி-8 பெட்டியில் தீ வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் கூக்குரலிட்டு அலறினர்.
உடனடியாக விரைந்து வந்த ரயில்வே ஊழியர்களும், போலீஸாரும் தீயை அணைத்து பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தண்டவாளத்தில் தீ-பாண்டியன் தப்பியது:
இதேபோல, சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஐந்தரை மணியளவில் பரவை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்திலிருந்து புகை வந்ததைப் பார்த்த என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
தண்டவாளத்தின் குறுக்கே டயர்களைப் போட்டு சிலர் தீவைத்திருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும், அதில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
நேற்று நடந்த இந்த மூன்று சம்பவங்களிலும் மதுரை சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் நேற்று நடத்திய ரயில் மறியல் போராட்டமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்கள்தான் ரயில் பெட்டி எரிப்புக்கும் காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனில் சிங்கால் கூறுகையில், தீ பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு தான் இதற்கான காரணம் தெரிய வரும் என்றார்.












Click it and Unblock the Notifications