கன்னடத்துக்கு செம்மொழி-பிரதமருக்கு எச்சரிக்கை
பெங்களூர்: கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்த முதல்வர் எதியூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் நவம்பர் 4ம் தேதி டெல்லி செல்கின்றனர்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் எதியூரப்பா பேசுகையில், கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை.
அதேபோல கர்நாடக திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதிலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒருவிதமாகவும், கர்நாடகத்துக்கு வேறு விதமாகவும் அதாவது பாரபட்சமாக நடந்து கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்துவதற்காக கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து கட்சி குழுவினரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்.
வருகிற நவம்பர் 4-ந் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறோம். இந்த குழுவில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரும் இடம்பெறுகிறார்கள்.
கர்நாடகத்தின் நலனுக்காக, கன்னட மொழிக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். டெல்லி செல்லும் அனைத்து கட்சி குழுவில் உங்கள் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பிரதமருக்கு கடிதம்:
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதியூரப்பா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கர்நாடகத்துக்கு உதவி செய்வதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. கர்நாடக மக்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்காமல் இருக்கின்றன.
கர்நாடகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே நான் தங்களுடன் நேரடியாக எடுத்துக் கூறி இருக்கிறேன். மேலும் மத்திய மந்திரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோரிடமும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்துக்கு எதிர்பார்த்த பதில் எதுவும் கிடைக்கவில்லை.
கர்நாடகத்தில் வாழும் 6 கோடி மக்களும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். மேலும் குல்பர்கா பிராந்தியத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதும் கர்நாடக அரசின் கோரிக்கையாகும்.
இந்த 2 முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவே இல்லை. இது விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. தமிழுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி விட்டது. அதே நேரத்தில் கன்னடத்துக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகத்துக்கு மறுக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை தங்களிடம் எடுத்துக்கூற திட்டமிட்டு இருக்கிறேன். இதற்காக அனைத்துக் கட்சி குழுவினரை டெல்லிக்கு அழைத்து வரவும் முடிவு செய்துள்ளேன். என்னுடன் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்பிக்களும், எம்எல்ஏக்களும் வருகிறார்கள்.
டெல்லியில் வருகிற நவம்பர் 5ம் தேதி தங்களை சந்தித்து கர்நாடகத்தின் தேவைகள் குறித்து பேச இருக்கிறோம். இதற்கு வசதியாக அன்றைய தினம் நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட 300 பேர் வரவுள்ளோம். அவர்களுடன் பிரதமர் முழுமையாக விவாதம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், மகாத்மாவின் சமாதியான ராஜ்காட்டில் தர்ணா போராட்டம் நடத்துவேன்.
எனது இந்த கடிதத்துக்கு தங்களிடம் இருந்து விரைவில் தக்க பதில் வரும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications