ராகுலுக்கு தடை போட்ட மாயாவதி-'கேன்டீனில் சந்தித்தார்'
கான்பூர்: கான்பூர் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, அங்கு மாணவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கேன்டீனில் இருந்த மாணவர்களை சந்தித்து அவர் உரையாடி விட்டுச் சென்றார்.
சில வாரங்களுக்கு முன்பு சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் புதிய ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை கட்ட இடம் ஒதுக்க மறுத்தது உ.பி. அரசு.
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்திக்கு மாயாவதி அரசு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
வெள்ளிக்கிழமை கான்பூர் வந்தார் ராகுல்காந்தி. அங்குள்ள கான்பூர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. உ.பி. அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த அனுமதி மறுப்பு என கூறப்படுகிறது.
பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தின் கேட் மூடப்பட்டது. இதனால் ராகுல் காந்தியால் மாணவர்களை சந்திக்க முடியவில்லை.
இதுகுறித்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா கூறுகையில், உ.பி. அரசு வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளது. அரசின் நெருக்கடி காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
ராகுல் காந்திக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பல்கலைக்கழககம் ரத்து செய்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.
இருப்பினும் இதனால் மனம் தளராத ராகுல் காந்தி, பல்கலைக்கழக கேன்டீனுக்கு விரைந்தார். அங்கு மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடினார்.
பல்கலைக்கழக ஆடிட்டோரியத்திலிருந்து கேன்டீன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடந்தே கேன்டீனுக்கு வந்து சேர்ந்தார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியுடன் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரும் நடந்தே வந்தனர்.இதனால் ராகுல் காந்தியின்பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பதில் திணறிப் போய் விட்டனர்.
ராகுல் காந்திக்கு அருகில் வந்த மாணவர்களை அவர்கள் தள்ளி விட முயன்றபோது பாதுகாவலர்களை ராகுல் காந்தி தடுத்து விட்டார்.
பின்னர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏன் உ.பி. அரசு என்னிடம் பழி வாங்கும் நோக்கில் நடந்து கொள்கிறது என்று புரியவில்லை. மாணவர்களை நான் சந்திப்பதை ஏன் அவர்கள் தடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என்றார்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட சில மணி நேரங்களில் கான்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்த ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர் தனது திட்டத்தை ரத்து செய்து விட்டார்.
மாயாவதிக்கு ராகுல் சவால்:
பின்னர் தனது தொகுதியான அமேதிக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாயாவதி என்னுடனும், எனது தாயாருடனும் ஏன் சண்டை போடுகிறார் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் பயந்து நான் உ.பி.க்கு வருவதை நிறுத்த மாட்டேன்.
எனக்கெதிராக எந்த மாதிரியான அவமரியாதையை அவர் செய்தாலும் நான் இங்கு வந்து மக்களைச் சந்தித்து பேசுவதை அவரால் தடுக்க முடியாது. இதற்காக அவர், ஜெயில் உள்பட எங்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பட்டும். அங்கு செல்லத் தயாராக இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications