நில மோசடி-கார்மெண்ட்ஸ் அதிபர் கைது!
சென்னை: வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை ரூ.22 கோடிக்கு விற்பனை செய்து, முன் பணமாக ரூ.6.10 கோடி வாங்கி ஏமாற்றியதாக கார்மெண்ட்ஸ் அதிபர் ஹாஜி மூசா கைது செய்யப்பட்டார்.
மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலாயுதம். அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் இவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மூசா அகமது, என்பவருக்கு சொந்தமான கிண்டியில் உள்ள ரூ.22 கோடி மதிப்புள்ள 18 கிரவுண்ட் நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார்.
அதற்காக ரூ.6.10 கோடியை முன்பணமாக கொடுத்து விற்பனை ஒப்பந்தம் போட்டுள்ளனர். அந்த நிலத்தின் பத்திரத்தை கனரா வங்கியில் ரூ.22 கோடிக்கு அடமானம் வைத்திருப்பது பின்னர் தெரிய வந்தது.
அதனால் அடமானம் வைத்த நிலத்தை மறைத்து தனக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்ததோடு, ரூ.6.10 கோடியை வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறார் என மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் வேலாயுதம் புகார் செய்தார்.
இந்தப புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று மூசாவை கைது செய்தனர்.
இவர், ஹாஜி மூசா அண்ட் கோ என்ற கார்மென்ட் எக்ஸ்போர்ட் தொழிலை சென்னை மற்றும் மதுரையில் நடத்துகிறார்.
கைது செய்யப்பட்ட மூசா, சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.