என்னை கைது செய்ய கருணாநிதி உத்தரவு-ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். எனது அறிக்கைக்கு பிறகு வைகோ, கண்ணப்பன் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
ஆனால் திருமாவளவன், வன்னியரசு, ராம நாராயணன், பாரதிராஜா உட்பட இன்னும் சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அவர்களையும் கைது செய்யவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். திமுக ஆட்சியையும் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
இதன் காரணமாக முதல்வர் கருணாநிதி உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காவல் துறை அதிகாரிகள் இப்போது என்ன காரணத்தை காட்டி ஜெயலலிதாவை கைது செய்வது என்று தீவிரமாக யோசித்து கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறேன்.
நானும் 10 ஆண்டு காலம் இந்த மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து, 10 ஆண்டு காலம் காவல் துறைக்கு பொறுப்பேற்று, பல்வேறு காவல் துறை அதிகாரிகளுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே, எனக்கும் உண்மை தகவல்களை தெரிவிக்க நம்பகமான ஆட்கள் இருக்கிறார்கள். தற்போது இந்தத் தகவல் எனக்கு வந்துள்ளது.
இது அடுக்குமா? இது எந்த வகையில் நியாயம்? இதற்கு தமிழக மக்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.