சென்செக்ஸுக்கு ஆக்ஸிஜன் தந்த தீபாவளி முகூர்த்தம்
மும்பை: நேற்று தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தில் தம் கட்டி மேலே வந்த சென்செக்ஸ் மேலும் கீழுமாகப் போய் பங்குச் சந்தை வர்த்தக நேரத்தின் இறுதியில் 9,034 புள்ளிகளில் போய் நின்றது.
நேற்று முன் தினம் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 8,000 புள்ளிகளுக்குக் கீழே போய் பீதியைப் பரப்பியது. மாலையில் 8,509 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஆனாலும் 191 புள்ளிகளை இழந்துவிட்டது.
இந் நிலையில் தீபாவளியையொட்டி நேற்று மாலை பங்குச் சந்தையில் முகூர்த்த வர்த்தகம் நடந்தது. ஒரு மணி நேரமே நடந்த வர்த்தகம் பீதியுடன் தான் ஆரம்பித்தது.
ஆனால், ஒருவழியாக 498 புள்ளிகளை கூடுதலாகப் பெற்று 9,034 புள்ளிகளுடன் நல்லபடியாக முடிந்தது முகூர்த்த வர்த்தகம். அதே போல தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டியும் 160 கூடுதல் புள்ளிகளுடன் 2,684ல் போய் நின்றது.
இன்று பங்குச் சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மாலையில் வர்த்தகம் முடிந்தபோது சென்செக்ஸ் 9,029 புள்ளிகளுடனும், நிப்டி 2,701 என்ற நிலையிலும் இருந்தது.