ராஜ் மீது குண்டாஸ்-மத்திய அமைச்சரவை கோரிக்கை
டெல்லி: வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரவை கோரியுள்ளது.
வட இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. ஆனால், இதில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சரத் பவார், பிரபுல் படேல், ஏ.ஆர்.அந்துலே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மட்டுமே பங்கேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் மிகக் கோபமாகப் பேசினர். ராஜ் தாக்கரேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாஸ்வான் கோரினார். இதை லாலுவும ஆதரித்தார். இதை மற்ற அமைச்சர்களும் ஆமோதித்தனர்.
விரைவில் வட மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், அரசியல் தைரியம் இருந்தால் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கு தமிழகம் தான் உதாரணம். புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோவை அந்த மாநில அரசு கைது செய்யவில்லையா?. அதே போல இந்த ராஜ் தாக்கரேவையும் பிடித்து உள்ளே போட மராட்டிய முதல்வருக்கு உத்தரவிடுங்கள் என்றார்.
ஒரு கட்டத்தில் லாலுவும் பாஸ்வானும் மத்திய அரசையும் மகாராஷ்டிர காங்கிரஸ் அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கவே, நான் என்ன தான் செய்ய முடியும் என பிரதமர் தனது இயலாமையைக் காட்டியதாகவும் தெரிகிறது.
கூட்டத்தின் முடிவில், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக்குக்கு சிவராஜ் பாட்டீலை விட்டு கடுமையாக எச்சரிக்கை விடுப்பது என முடிவானது. மேலும் பிகார் வாலிபர் சுடப்பட்டது, உ.பி. வாலிபர் ரயிலில் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடவும் முடிவானது.
சாத் பூஜையை தடுக்க மாட்டோம்- ராஜ்:
இந் நிலையில் இன்று நீதிமன்ற அனுமதியோடு நிருபர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே,
மும்பையில் நடக்கும் சாத் பூஜாவை (வட இந்தியர்கள் கொண்டாடும் விழா) நாங்கள் தடுக்க மாட்டோம். சில சமூக விரோதிகள் தான் அதைத் தடுத்து நிறுத்தி வன்முறையைத் தூண்ட முயல்கின்றனர் என்றார்.
இந்தப் பூஜையில் பங்கேற்க உத்தரப் பிரதேசம், பீகாரில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் மும்பையில் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராஜ் கூறுகையில், மராத்தி தெரியாதவர்கள் மும்பைக்கு வருவதை நான் இப்போதும் எதிர்க்கிறேன். மும்பையில் உ.பி. வாலிபர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், அஸ்ஸாமில் பிகாரிகள் கொல்லப்படுவது குறித்து விசாரிப்பதில்லை. அதே போல மராட்டிய வாலிபர்கள் தாக்கப்பட்டாலும் யாரும் வாய் திறப்பதில்லை என்றார் ராஜ்.