தேமுதிக-காங். கூட்டணி பேச்சு-சரத் தகவல்
திருச்சி: அதிமுக, திமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்னையைத் தீர்க்க, நார்வே தூதுக் குழு சென்றது போல், நாம் ஏன் தூதுக் குழு அனுப்பக் கூடாது எனக் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மீண்டும் நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதில் தமிழக தலைவர் யாராவது இடம்பெற வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை அரசியலாக்கும் எண்ணத்தை கைவிட்டு, மனித நேயத்தோடு அணுக வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி நன்கு அறிந்தவர் வைகோ. அவர் அப்பிரச்னை குறித்து பேசினார். திரைப்பட டைரக்டர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதனால், அவர்களை மன்னிக்கலாம்.
நவம்பர் முதல் தேதி நடிகர் சங்கம் சார்பில், சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது. அதன்பின், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும்.
எங்கள் கட்சி அதிமுக, திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. தேமுதிக காங்கிரசுடன் கூட்டணி பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. எனவே அக்கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.
எங்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டால், 10 முதல் 15 சதவீத மக்கள் ஓட்டளித்தால் கூட போதும்.
விரைவில் மதுரை அல்லது ஒரு தென் மாவட்டத்தில் கட்சியின் மாநாடு நடத்தப்படும். அதிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பும் இருக்கும்.
டிசம்பர் 20ம் தேதிக்குப் பின் நூறு நாட்கள் கிராமப் புறங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன் என்றார்.