ஒரிஸ்ஸா பெண்ணைக் கொன்ற இலங்கை அகதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஒரிசாவைச் சேர்ந்த இளம் பெண்ணை, இலங்கை அகதி ஒருவர் படுகொலை செய்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அந்த பகுதியிலேயே குடிசை போட்டு தங்கி வருகின்றனர். ஒரிசாவை சேர்ந்த கண்ணைமண்டல் என்பவரும் மனைவி கூர்தேசியுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
கண்ணைமண்டல் தனது குடிசையில் பெட்டிகடை வைத்திருக்கிறார். அதை அவரது மனைவி கூர்தேசி கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்த கண்ணைமண்டல் வீடு திரும்பிய போது அவரது மனைவி கூர்தேசி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து கண்ணைமண்டல் புதியம்புதூர் போலீசில் புகார் செய்தார்.
கொலையாளிகளை பிடிக்க தூத்துக்குடி குற்றபிரிவு போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்பு என்ற இலங்கை அகதிக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications