இலங்கை நிவாரண நிதி ரூ3 கோடியை தாண்டியது
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 3 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 3 நாட்களாக தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி முதல் ஆளாக ரூ. 10 லட்சம் வழங்கி இதைத் தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
3வது நாளான நேற்று மாலை நிலவரப்படி நிதி வசூல் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.
தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், பாரத் பல்கலைக்கழக வேந்தர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் தலா ரூ. 10 லட்சத்திற்கான
காசோலையை வழங்கினர்.
நடிகை நயனதாரா, தொழிலதிபர்கள் ஜெயமுருகன், பிரதீப் கோத்தாரி ஆகியோர் தலா ரூ. 5 லட்சம் நிதியினை முதல்வரிடம் அளித்தனர்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கே.சி.பி. பேக்கேஜிங் நிறுவனம் ஆகியோர் தலா ரூ. 2 லட்சம் நிதியளித்தனர்.