புதிய தமிழகம்-இன்னொரு பிரிவினர் பயஙகர மோதல், சென்னையில் பஸ்சுக்கு தீ
மதுரை: உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் மீது தாக்குதல் நடந்தது. பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிராக ஒரு பிரிவினர் கட்டிய தடுப்புச் சுவர் கடந்த மே மாதம் 6ம் தேதி இடிக்கப்பட்டு அங்கு பொதுப் பாதை அமைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றனர்.
இந் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி தொண்டர்களுடன் உத்தப்புரம் வந்தார். அங்கு அவர் இரு தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசிய பின் எழுமலை அருகே நடக்க இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார்.
அவரது அவரது காருக்கு முன்பும் பின்பும் ஏராளமான கார், வேன்களில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி வந்தனர்.
கார் எழுமலை அருகே வந்தபோது யாரும் கோஷம் எழுப்பக் கூடாது என அந்தப் பகுதியினர் சிலர் கூறினர். இதையடுத்து அவர்களுக்கும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியாக மாறியது.
கற்கள், செருப்புகள், சோடா பாட்டில்கள் பறந்தன. இந்த சண்டையில் டாக்டர் கிருஷ்ணசாமி வந்த கார் உள்பட புதிய தமிழகம் கட்சியினரின் 3 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 3 கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது, பல கடைகள் அடித்து உடைக்கப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து மோதலை அடக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் எஸ்ஐ ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து எஸ்பி தலைமையில் வந்த கூடுதல் போலீசார் அவர்களை அடித்து விரட்டினர்.
இந்த சம்பவத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து எழுமலை, உத்தபுரம், கோட்டப்பட்டி, வல்லப்பட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி உள்பட பல கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பஸ்சுக்கு தீ:
இதற்கிடையே டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அரசு பஸ்சுக்கு தீ வைத்தனர்.
கோயம்பேட்டில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட அரசு பஸ் காசி தியேட்டர் அருகே இரவு 1 மணிக்கு சென்றபோது அதை 3 பேர் வழி மறித்தனர்.
பயணிகள் நிற்பதாக கருதி டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். அப்போது திடீரென அவர்கள் பஸ் மீது கல் வீசினர். பின்னர் அதில் ஒருவர், துணியில் பெட்ரோலை நனைத்து தீ வைத்து அதை ஜன்னல் வழியாக பஸ்சுக்குள் வீசினார்.
இதில் பஸ்சின் இருக்கையில் தீப்பிடித்து கொண்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர்.
பொது மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் இரு இருக்கைகள் தீயில் நாசமாகிவிட்டனர். பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீ வைத்த கும்பல் கிருஷ்ணசாமியை வாழ்த்தி கோஷமிட்டவாரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது.
கடையநல்லூரில் இரவில் மறியல்
கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே இரவில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
இதயைடுத்து போலீசார் 17 பேரை கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்போடு பஸ்கள்:
இந்த போராட்டத்தையடுத்து நள்ளிரவில் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
இன்று காலை செங்கோட்டையிலிருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேரூந்துகள் 5, 6 ஆக சேர்ந்து சேர்ந்து இயக்கப்பட்டன. முன்னால் போலீஸ் வாகனம் செல்ல பின்னால் பேரூநதுகள் சென்றன.












Click it and Unblock the Notifications