வீரபாண்டி ஆறுமுகம் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு
சென்னை: சேலத்தில் நகைக்கடைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த்தாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ்'என்ற நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீநாத், அவரது தாயார் அன்னபூர்ணா, அவரது சகோதர மனைவி சாதனா ஆகியோர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு சொந்தமான நகைக்கடை சேலத்தில் முதல் அக்ரகாரம் தெருவில் அமைந்துள்ளது. இந்தக் கடையையொடடி ஆறடி அகலம் கொண்ட சந்து உள்ளது. இதனை நாங்களும், எங்கள் கடைக்கு அருகில் உள்ளவர்களும் பயன்படுத்தி வருகிறோம். இந்த சந்தில் மார்பிள் கற்களை பதித்து நாங்கள் பராமரித்து வருகிறோம்.
இந் நிலையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எங்கள் குடும்பத்திற்கு பிரச்சனையை உண்டாக்கி வருகிறார். சேலம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் எங்களுக்கு நிலம் உள்ளது.
அந்த எங்களுடைய நிலத்தைச் சுற்றி நாங்கள் காம்பவுண்டு சுவர் எழுப்பினோம். அதனை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் இடித்து தள்ளிவிட்டனர்.
சேலம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகிய அனைவருமே அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்கள் கடைக்கு அருகே உள்ள ஆறடி அகல சந்தையும், அங்கம்மாள் காலனியில் உள்ள எங்களது நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் அங்கம்மாள் காலனிக்கு பிரதான சாலையை உருவாக்கலாம் என்ற நோக்கத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதற்கு அரசு எந்திரமும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே அங்கம்மாள் காலனியில் வசித்தவர்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதை எதிர்த்து அங்கு வசித்தவர்கள் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
எனவே எங்களுக்கும், எங்கள் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து உதச்தரவிட்டார் நீதிபதி சுகுணா.












Click it and Unblock the Notifications