ராஜிவ் கொலை: புலிகளை தூண்டிவிட்டது ஜெ- திமுக

Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதாவே அவரது அறிக்கையில் அடுத்த வாக்கியத்தில் "சக்கர நாற்காலியில் கருணாநிதி அமர்ந்திருக்க, பக்கத்தில் துணைவி ராஜாத்தி நிற்க, அருகில் கனிமொழி நின்று கொண்டு அரிசி மூட்டைகள், சேலைகள், லுங்கிகள் மற்றும் நைட்டிகள் வழங்கியதாக'' என்று குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சேலைகள், லுங்கிகள் வழங்கியதைப் புரிந்து கொள்ளலாம்.

'நைட்டிகள்' வழங்கியிருப்பது பற்றி "தமிழ் மொழியின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கருணாநிதிக்கு உள்ள அக்கறை இது தான்'' என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.

பதவி இல்லாமல் இருப்பதால் அம்மையாருக்கு ஏதாவது ஆகி விட்டதா என்ன?. 'நைட்டிகள்' அணிவதை தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதமானது, அதை எப்படி கொடுக்கலாம் என்று கேட்கிறாரா?.

அல்லது "வைரம்'' திரைப்படத்திலே ஜெயலலிதா உடுத்தியிருந்த ஆடைகளைப் போல வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறாரா?.

தமிழகத்திலே உள்ள யாரும் நைட்டிகளை அணிவதில்லையா? இலங்கைத் தமிழர்கள் அணியக் கூடிய ஒன்றைக் கொடுப்பது குற்றமா? நைட்டி என்று சொல்வதைக் குறை கூறுகிறாரா?. அதுவும் அந்த வார்த்தையை அண்ணன் கலைஞர் பயன்படுத்தவில்லையே?

அடுத்து கலைஞர் தன் துணைவியார் தயாளு அம்மாளை முன்னிலைப்படுத்தியதாக ஜெயலலிதா கூறுகிறார். இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக தயாளு அம்மாள் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை அளித்ததைத் தான் முன்னிலைப்படுத்தியதாகக் கூறுகிறார்.

அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட, தமிழ் ரத்தம் ஓடுகின்ற- தமிழ் உணர் வுள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உதவி செய்வது ஜெயலலிதா மொழியிலே குற்றமா?.

"கருணாநிதியின் மனைவிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கக் கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது அவருக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது கருணாநிதியின் மனைவி வருமான வரி செலுத்துகிறாரா? என்பதையெல்லாம் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்'' என்கிறார் ஜெயலலிதா.

தயாளு அம்மாள் அவர்கள் சன் தொலைக்காட்சியில் பங்கு தாரராக இருந்து; சில ஆண்டுகளுக்கு முன்பு- அவர் அதிலிருந்து விலகிய போது அவருக்குக் கிடைத்த நூறு கோடி ரூபாயில் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதமிருந்த ஒன்பதரை கோடி ரூபாயினை வங்கியிலே தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார்.

அதற்கு மாதந்தோறும் வட்டியும் கிடைக்கிறது. அவருக்குக் கிடைத்த தொகைக்கு அவர் முறையாக வருமான வரி கட்டியிருக்கிறார். தற்போது மாதந்தோறும் கிடைத்து வரும் வட்டித் தொகைக்கும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி வருமான வரி கட்டி வருகிறார்.

இது தான் கணக்கே தவிர, அவர் ஜெயலலிதாவைப் போல வருமான வரி முறையாகக் கட்டாமல் வழக்குகளிலே சிக்கிக் கொண்டு ஆண்டுக்கணக்கிலே நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர் அல்ல.

தன்னுடைய வருமான வரி கணக்கைச் சரிக் கட்டுவதற்காக மத்தியிலே அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா அவர்களை வீட்டிற்கே விருந்துக்கு அழைத்து, அவர் புறப்படும்போது அவர் கையிலே வருமான வரி வழக்கிலிருந்து விடுபட பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிய விவரம் தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்தா விட்டது?.

வெளிநாட்டிலேயிருந்து யாரோ எனக்குத் தெரியாமல் என் பெயருக்கு பணம் அனுப்பினார்கள், யார் அனுப்பியது என்று தெரியாமலே அதனை என் பெயரிலே டெபாசிட் செய்து கொண்டேன் என்று ஜெயலலிதா ஊருக்கு கணக்கு காட்டினாரே அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

எந்தவிதமான முதலீடும் இல்லாமல் 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து, அதற்கான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று ஆண்டுக் கணக்கிலே இன்னும் நாறிக் கொண்டிருக்கிறதே, அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

உதகையிலே கோடைநாடு எஸ்டேட் தனக்கு வேண்டியவருடையது என்று முதலில் கூறி, பின்னர் உடன்பிறவா சகோதரியின் சகோதரிக்கு உரியது என்று மாற்றப்பட்டதே, அதுபோன்றது அல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

"கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டு''மென்றாரே, நானே அந்தக் கணக்கு விவரங்களை விளக்கி விட்டேன்.

ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு என்ன? மற்றவர்களின் கணக்கைப் பற்றிக் கேட்க அருகதை வேண்டாமா? தன் மேல் ஆயிரம் குற்றங்களைச் சுமந்து கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த நினைப்பது என்ன நியாயம்?

"கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலே அதிலே சுய நலம் இருக்கும்'' என்று ஜெயலலிதா சொல்கிறார் எந்தத் திட்டத்திலே சுய நலம் ஏழை மகளிர் திருமண நிதி உதவி திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம், விவசாயிகளுக்கு கடன் நிவாரணத் திட்டம், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம் என்று எந்தத் திட்டத்தை சுயநலத் திட்டம் என்கிறார் ஜெயலலிதா?.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை கொள்ளையடித்து தன் பெயருக்கு குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு உச்சநீதிமன்றமே திருப்பிக் கொடுக்கச் சொன்னதே அதற்குப் பெயர் தான் ஜெயாவின் சுயநலம்.

ஏழைத்தாய்மார்கள் பொழுது போக்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து டெண்டர் போட்டு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்குவது இந்த ஆட்சி.

ஆனால் உங்கள் ஆட்சியிலே வெளி மார்க்கெட் விலையை விட அதிக விலை கொடுத்து- உள்ளாட்சி மன்றங்களுக்கான தொலைக் காட்சி பெட்டிகளை வாங்கி ஊழலிலே மாட்டிக் கொண்டது உங்கள் ஆட்சி.

ஸ்பிக் வங்கியிலே அதன் பங்குகளை வாங்கியதிலே நடைபெற்ற ஊழல் கதை தெரியாதா? அந்த ஊழலுக்கு கையெழுத்து போட மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கிடைத்த பரிசு தெரியாதா? ஆம்னி பேருந்துகளுக்கு வரியைக் குறைத்து நடத்திய ஊழல் சுயநலத்திற்காக செய்யப்பட்டது தானே?

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கியதிலே நடைபெற்ற ஊழல் என்று புகழ் பெற்ற ஜெயலலிதா சுய நலத்தைப்பற்றி பேசலாமா?

இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்க நிவாரண நிதி திரட்டினால் அதனை சுயநலம் என்று கூறுவதா?.

பள்ளி மாணவிகள் தங்கள் பாக்கெட் மணியை தொகையினைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தார்களே, அவர்களுக்குள்ள உணர்வாவது ஜெயலலிதாவுக்கு இருக்க வேண்டாமா?.

அம்மையாரின் குணம் புரிந்து தான் நிவாரண நிதி வழங்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காசோலை மூலமாகத் தான் வழங்க வேண்டுமென்று சொல்லப்பட்டு - வழங்குகின்ற ஒவ்வொருவருடைய பெயரும் எழுதப்பட்டு அது வெளியிடப்பட்டு வருகிறது. அதிலே கட்டாய வசூல் என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது.

அதற்காக அம்மையார் தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறாராம். வெட்கம்! வெட்கம்!.

அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படுகின்ற இந்த நிதி விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சென்று விடுமோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்களாம். ஜெயலலிதா அளந்திருக்கிறார்.

இருபதாண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி உண்டியலிலே போடப்பட்ட தொகையைப் பிரித்து அனைத்து இலங்கைப் போராளிகளுக்கும் பங்கிட்டு வழங்கியபோது, அப்போது அதிமுக ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்களுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தோடு திமுக சார்பிலே கொடுக்கப்பட்ட நிதி உதவியைப் பெற மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள்.

"அந்த விடுதலைப் புலிகளுக்கு எம்ஜிஆர் செய்த உதவியைப் போல கருணாநிதி எதுவும் செய்யவில்லை'' என்று ஆங்கில நாளிதழ்களுக்கு பேட்டியளித்தவர் தான் இந்த ஜெயலலிதா.

அந்த விடுதலைப் புலிகளுக்கு இப்போதும் நேரடியாக ஆதரவு தெரிவித்தும், தனி நாடே கேட்போம் என்ற அளவிற்கும் துணிந்து பேசக் கூடிய மதிமுகவை இன்றைக்கும் தோழமை கட்சியாக ஜெயலலிதா வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கட்சியினரும் நாங்கள் விடுதலைப் புலிகளை அழிக்க நினைக்கும் அதிமுகவோடு தான் உறவாக இருப்போம் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், அரசின் சார்பில் திரட்டப்படுகின்ற நிவாரண நிதித் தொகை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சென்று விடுமோ என்று தமிழக மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று அறிக்கை விடுகிறார் என்றால், யாரை ஏமாற்ற இந்த நாடகம்?.

தமிழ் மக்கள் யாருக்கும் ஜெயலலிதா போல அந்தச் சந்தேகம் கிடையாது.

அதனால் தான் அவர்கள் தாராளமாக முன் வந்து மூன்றே நாட்களில் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு தாங்களாகவே நிதியினை வழங்கியிருக்கிறார்கள். இந்த பொது நிதிக்கு ஒரு ரூபாய் கூட வழங்காத ஜெயலலிதார் அதிலே கோணல், இதிலே கோணல் என்று பம்மாத்து காட்டுகிறார்.

இது போன்ற காரியங்களில் அரசிலே இருப்போர் யார் என்று பார்க்க கூடாது. இதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது சுனாமி ஏற்பட்டு தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது யார் ஆட்சியிலே இருக்கிறார்கள் என்று பார்க்காமல் திரைப்படம் எழுதி தனக்குக் கிடைத்த 21 லட்சம் ரூபாயை தன் மகன் மு.க. ஸ்டாலின் மூலமாக இதே ஜெயலலிதாவிடம் கொண்டு போய் கொடுக்கச் சொன்னவர் தான் கலைஞர்.

அப்படிப்பட்ட தலைவர் எங்கே? இன்றும் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழனுக்காக திரட்டப்படுகின்ற நிதிக்கு சுயநலம் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே? தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

"தமிழக மக்களின் உதி ரத்தை உறிஞ்சி உலகப் பணக்காரர்களின் வரிசையிலே இடம் பிடித்தவர் இந்தக் கருணாநிதி'' என்கிறார் ஜெயலலிதா. யாருடைய உதிரத்தை யார் உறிஞ்சியது அதனால் உலகப் பணக்காரர்களாக மாறியது யார்?.

அவர்களுக்கு எங்கெங்கே எஸ்டேட்டுகள், தோட்டங்கள், மாளிகைகள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

இந்த அறிக்கையை வெளியிட நிச்சயமாக நான் காரணமல்ல, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை தான் காரணம் என்பதையும் அவருடைய அறிக்கையை படிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்வு தான் இந்த அறிக்கை என்பதையும் கூறி- தமிழ் மக்கள் என்னை மன்னிக்க வேண்டிக் கொண்டு இதனை வெளியிடுகின்றேன்.

இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+