சர்வதேச நிதி நெருக்கடியால் ஆட்குறைப்பு வேண்டாம்! - பிரதமர்
புதுடெல்லி: சர்வதேச நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் வேலையில் இறங்க வேண்டாம் என்று தொழிலதிபர்களை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.
நிதி நெருக்கடியால் தொழில்துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க முன்னணி தொழிலதிபர்களை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கமல்நாத், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைவருடனுமான கலந்துரையாடலுக்குப் பின் பிரதமர் பேசியதாவது:
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் தாக்கம் இந்தியாவிலும் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய பாதிப்பில்லை. உலகின் மற்ற நாடுகளில்தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இச் சூழ்நிலையைச் சமாளிக்கும் வகையில், நிதிப் புழக்கத்தை அதிகரிக்கவும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இனியும் எடுக்க உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நிறுவனங்கள் தங்களுக்குள்ள சமூகப் பொறுப்பை மனதில் கொள்ள வேண்டும். செலவு குறைப்பை காரணம் காட்டி, ஆட்குறைப்பில் ஈடுபடக்கூடாது. அது பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும்.
ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மூலம் நியாயமான வட்டியில் கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், என்றார் பிரதமர் பேசினார்.
கூட்டத்துக்குப் பிறகு வர்த்தகத் துறைச் செயலர் பிள்ளை கூறுகையில், தொழில் துறை எதிர் கொண்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பிரதமர் அல்லது நிதியமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications