தாக்குதல்-நீதி விசாரணை கோரும் கிருஷ்ணசாமி
சென்னை: தன் மீது நடந்த தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் உத்தமப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், இன்னொரு பிரிவினர் இடையே சுவர் எழுப்புவது தொடர்பாக 6 மாதமாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு சமூகத்தினர் இடையே சமரசம் ஏற்படுத்த அங்கு சென்றேன்.
மதுரை திரும்பும்போது எனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனக்கு பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மட்டுமே வந்திருந்தார்.
என்னை தாக்க வந்த கும்பலை நீண்ட நேரமாகியும் போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை. தடியடி நடத்தி கூட அவர்களை விரட்ட முடியவில்லை.
ஆனால் எனது தொண்டர்கள் தான் கல்வீச்சில் இருந்து என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
நான் உத்தமபுரத்துக்கு செல்வது குறித்து முதல்வசரிடம் கடிதம் கொடுத்திருந்தேன். ஆனாலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை. 2 வருடமாக எனது பாதுகாப்பை குறைத்து விட்டார்கள். எனக்கு ஒரே ஒரு போலீஸ்காரரை மட்டும் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் உள் நோக்கம் இருப்பதாக கருதுகிறேன்.
இந்த சம்பவத்துக்கு போலீஸ் துறையின் மெத்தன போக்கே காரணம். தாக்குதலைக் கண்டித்து அமைதியான முறையில் மறியல் நடத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தடியடி நடத்தி கைது செய்கிறார்கள். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியில் இன்று போலீஸ் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் சுரேஷ் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார், அதன் பின்னணி என்பது பற்றி அறிய அமர்வு நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications