மதுரை-நெல்லையில் பஸ்களுக்கு தீ வைப்பு
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டது.
மதுரை மாவட்டம் உத்தபுரத்தை அடுத்த எழுமலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து புதிய தமிழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் சாலை மறியலிலும் பஸ்கள் மீது கல் வீச்சிலும் இறங்கினர்.
மதுரை அருகே கொட்டாம்பட்டியில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் அந்த வழியாக வந்த பஸ்கள் மீது கல்வீச்சில் இறங்கியது. இதில் 5 பஸ்களின் சேதமடைந்தன.
இதையடுத்து தாக்குதல் நடத்திய புதிய தமிழகம் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் (32), இளங்கோ (40), இமயவர்மன் (35), வெள்ளைச்சாமி, ராஜேந்திரன், மணிவேல், செல்வகணேசன், மாரிமுத்து, ராஜராஜன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இந் நிலையில் இன்று காலையில் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பஸ்சுக்குள் (வட்டப் பேருந்து) ஏறிய கும்பல் சீட்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இதைப் பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி ஓடியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதில் பஸ்சின் 10 இருக்கைகள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பஸ் தப்பியது.
அதே போல நெல்லை அருகே ராஜபாளையத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை 20 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த கும்பல் டிரைவர் செல்வகுமாரிடம் இருந்த துண்டை எடுத்து டீசல் டேங்கில் நனைத்து தீயிட்டு பஸ்சுக்குள் வீசினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்தனர். இதில் பஸ்சில் 4 இருக்கைகள் எரிந்தன. தீவைத்த கும்பல் தப்பியோடிவிட்டது.
அதேபோல மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த மற்ற 2 அரசுப் பேருந்துகள் மீதும் ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனியார் பேரூந்தை மறித்து டிரைவரை மிரட்டினர். உடனே டிரைவர் பயணிகளை ஏற்றாமல் வெறும் பஸ்சை மட்டும் ஓட்டி சென்றார். பின்னர் அப்பகுதியிலுள்ள பேன்சி ஸ்டோர், டீக்கடைகள் என 4 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தென்காசி மதுரை சாலையில் உள்ள புளியங்குடி புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் நிறைந்த பகுதி என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசரா கார்க் முகாமிட்டிருந்தார். அவரது காரை புதிய தமிழகம் கட்சியினர் சூழந்து கொண்டு கொரோ செய்தனர். பொறுமையிழந்த எஸ்பி தடியடி நடத்த உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து புளியங்குடியில் பதற்றம் நிலவி வருகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பெரும் ஜாதி கலவரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆரணி சென்ற பஸ்சுக்கு ஒரு தீ வைத்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications