அறைவிடும் அரசியல்வாதிகள்!
பாட்னா&சிந்த்வாரா: விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் விமான நிறுவன மேலாளரை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் ஏசியபடி அறைந்து தாக்கினார்.
பிகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு கிங்பிஷ்ஷர் நிறுவன விமானம் புறப்பட இருந்தது.
இதில் பயணம் செய்ய லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் டிக்கெட் வாங்கியிருந்தார்.
ஆனால், 8.20 மணி வரை அவர் விமான நிலையம் வரவில்லை.
8.20 மணிக்கு அந்த விமானத்துக்கு ஓடு பாதையில் செல்ல அனுமதி கிடைத்தது. அப்போது தான் அமைச்சர் விமான நிலையத்துக்குள் வந்தார்.
ஆனால், விமானம் ரன் வேயில் நுழைந்துவிட்டதால் இனி அதில் உங்களை ஏற்ற முடியாது என்று விமான நிறுவன மேலாளர் அமைச்சரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலாளரை மோசமான வார்த்தைகளால் திட்டியபடி தாக்கினார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிங்பிஷ்ஷர் நிறுவனம் விமான நிலைய போலீசிடம் புகார் அளித்துள்ளது.
கட்சி தலைவரை அறைந்த உமா பாரதி:
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தி்ல் சிந்த்வாரா நகரில் தனது ரெஸ்ட் ஹவுசுக்கு வெளியே நின்றிருந்த தனது கட்சியின் மாநில துணைத் தலைவரை அறைந்தார் பாரதீய ஜன் சக்தி தலைவியான உமா பாரதி.
அனில் ராய் என்ற அவர் சில தொண்டர்களுடன் அங்கு காத்திருந்தபோது வெளியே வந்த உமா, நான் உங்களை இங்கே வர வேண்டாம் என்று சொன்னேனே என்று கோபமாகக் கூறியபடி பளார் என அறை விட்டார்.
இதையடுத்து கண்ணீருடன் கன்னத்தைத் தடவியபடி சென்றார் ராய். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போன பாரதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பின்னர் அவருடனே மாவட்ட சுற்றுப் பயணம் கிளம்பினார்.
இது குறித்து ராயிடம் கேட்டபோது, உமா பாரதி என் அக்கா மாதிரி. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications