மாலேகான் குண்டுவெடிப்பு: ராணுவ லெப். கர்னல் கைது

மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முதலில் தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார். அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.
இந்த நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரியிருந்தனர். இதையடுத்து ராணுவம், புரோஹித்தை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புரோஹித் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
புரோஹித் அபினவ் பாரத் என்ற அமைப்பை நிறுவியர் என்று கூறப்படுகிறது. இது ஒரு இந்து தீவிரவாத போக்குடைய அமைப்பாகும்.
புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ரமேஷுக்கு, 5 எஸ்.எம்.எஸ்.களை புரோஹித் அனுப்பியுள்ளார். மேலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும்படியும் அவர் ரமேஷை அறிவுறுத்தியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் பிடிபட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications