கோவையில் 4 நாட்களில் 10,000 பேருக்கு வேலை காலி
கோவை: தமிழக அரசு அமல்படுத்தி வரும் புதிய மின் விநியோக திட்டத்தால், உற்பத்தி குறைந்திருப்பதால், கோவையில் உள்ள பல்வேறு பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 10 ஆயிரம் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இதே வேகத்தில் போனால் விரைவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு முறைகளில் மின் தடை அம்படுத்தப்படுகிறது. இதுதவிர சமீபத்தில் புதிய மின் விநியோகத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழில் கூடங்கள் நிறைந்த மாவட்டம் கோவை. இங்கு ஏராளமான பொறியியல் நிறுவனங்கள், பஞ்சாலைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மோட்டார் பம்புகள் தயாரிக்கும் ஆலைகள் என 50,000ம் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களிலிருந்து 25 ஆயிரம் விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டிலேயே கோவை மாவட்டத்தில்தான் அதிக விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் மின் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமீப காலமாக தத்தளித்து வருகின்றன.
உற்பத்திக் குறைவு, செலவுகள் அதிகரிப்பு, ஆர்டர்கள் குறைவு, பண வீக்கம் என பல காரணங்களால் தொழில்
அடியோடு பாதித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரிய நிறுவனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர ரக நிறுவனங்களுக்கு ரூ. 7,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பம்புகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரூ. 2,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இதை சமாளிக்க ஆள் குறைப்பு நடவடிக்கையில் தற்போது இந்த நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
முதல் கட்டமாக அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சித் தொழிலாளர்களை நிறுவனங்கள் நீக்க ஆரம்பித்தன. தற்போது ரெகுலர் தொழிலாளர்கள் எனப்படும் நிரந்தரத் தொழிலாளர்களையும் நிறுவனங்கள் நீக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான என்ஜீனியரிங் நிறுவனங்களைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.
நிலைமையில் விரைவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் 1 லட்சம் பேரை நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்பும் அபாயம் உள்ளதாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ.
ஆள் குறைப்பு தவிர வேறு சில நடவடிக்கைகளையும் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. ஒரு ஷிப்ட் நீக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விரைவில் நிலைமை மேம்பட்டால்தான் கோவை தொழில் நிறுவனங்களை பெரும் சிக்கலிலிருந்து காக்க முடியும் என கோவை மாவட்ட தொழில் நிறுவன அமைப்புகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications