கிருஷ்ணசாமிக்கு போலீஸ்அனுமதி மறுப்பு
மதுரை: துப்பாக்கி சூடு நடந்த கிராமத்திற்கு செல்ல புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது உசிலம்பட்டி அருகே நடந்த தாக்குதலை கண்டித்து தென் மாவட்டங்களிலும் சென்னையிலும் கல் வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் உடைப்பு, பஸ் எரிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் மதுரை அருகே இ.கோட்டைபட்டியில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் நடத்தியபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற இளைஞர் இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆர்.டி.ஓ. ஜெயராஜ், மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சுரேஷ் உடலுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தி, கட்சியின் சார்பில் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.
இதைடுத்து சுரேசின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. சுரேசின் இறுதிச் சடங்கில் பங்கேற்க துப்பாக்கி சூடு நடந்த கிராமத்திற்கு செல்ல டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கேட்டார்.
ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
தொண்டர்களுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை:
இந் நிலையில் இன்று கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உத்தப்புரம் பிரச்சனைக்கு நமது முயற்சி மூலமாக சுமூகத் தீர்வு வந்து விடக்கூடாது என்று கருதிய சில சுயநல சக்திகள் தான் என் மீது ஏழுமலை அருகே கொலை வெறித் தாக்குதல் நடத்தி கலவரத்திற்கு வித்திட்டனர்.
இந்த சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மிக்க வேதனைக்கும் வருத்தத்திற்கும் ஆளானதன் விளைவாக தமிழகமெங்கும் ஆங்காங்கே ஜனநாயகரீதியாக சில மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், பேராட்டங்கள் நடைபெற்றிருக்கலாம்.
அப்போது அநியாயமாக 22 வயது இளைஞன் சுரேஷ் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளான். இது மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகக் காரணமாகி விட்டது.
நான் முதல்வரை சந்தித்து துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சியினரை விடுதலை செய்யவும், வழக்குகளை வாபஸ் பெறவும் வலியுறுத்தியுள்ளேன்.
கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும், எனவே புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதுரையில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே இ.கோட்டைப்பட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நவம்பர் 8ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து நீதி விசாரணை கோரியும், இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
நெல்லையி்ல் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலைமறியல், கல்வீச்சு, பஸ்சுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களால் பல கிராமங்களுக்கு நான்காவது நாளாக பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டது.
இதனால் கிராம மக்கள் லோடு ஆட்டோ, வேன் உள்ளிடடவைகளில் பயணம் செய்தனர். இதனால் பள்ளி, மாணவ, மாணவிகள் பல மைல் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்றனர். நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் 5 பஸ்களாக சேர்த்து இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications