மத்திய அரசு நடவடிக்கை திருப்தியில்லை-திருமா
சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இலங்கையில் பேரை நிறுத்த வலியுறுத்தி அந்தக் கட்சியின் மகளிர் அணி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 2,000 பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
அங்கிருந்த திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகிறோம். மனித சங்கிலி, தொடர் போராட்டங்கள் நடத்தியும் கூட இன்னும் மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை என்பது வேதனை.
போரை நிறுத்துமாறு இந்திய அரசு சொல்லவில்லை என்று வெளிப்படையாகவே சிங்கள அரசு அறிவித்துள்ளது.
சிங்கள அரசுக்கு மத்திய அரசின் உதவி இன்னும் நிறுத்தப்படவில்லை. மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லதல்ல.
ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உத்தப்புரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு,
மத்திய அரசு நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் உள்ளிடமாக அவை இருக்கக் கூடும். ஆனால் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.
உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications