திமுக பாணியில் பாஜக!
ரெய்ப்பூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியைப் போல, கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தரப்படும் என சட்டீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று தலைநகர் ரெய்ப்பூரில் இன்று வெளியிட்டது.
இதில் முக்கிய அம்சமாக கிலோ அரிசி ரூ. 1 என்ற புதிய திட்டம் இடம் பெற்றுள்ளது. அந்த்யோதயா ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்தத் திட்டம். மற்ற ஏழை மக்களுக்கு கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இதுதவிர 32 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக உப்பு வழங்கப்படும். 5 குதிரை சக்தி கொண்ட பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் ரமன் சிங்கும், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் ரவி சங்கர் பிரசாத்தும் இணைந்து வெளியிட்டனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் ...
- விவசாயிகளுக்கு இலவச கடன்.
- விவசாய கருவிகள் வாங்க 50 சதவீத மானியம்.
- விவசாயிகளுக்கான கடனுதவி ரூ.. 3 லட்சத்திலிருந்து 5
லட்சமாக உயர்வு.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு படிப்புதவி.
- உயர் படிப்புக்கு வட்டி இல்லாத கடன்.
- பெண் தொழிலாளர்களுக்கு 10 ரூபாய் கூடுதல் கூலி.
- மாவட்டந்தோறும் ஸ்டேடியம்.
- ரெய்ப்பூரை மாநிலத்தின் இதர முக்கிய நகரங்களுடன் இணைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல முக்கிய
அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications