பரந்தன், பூனேரியில் இலங்கை படைகள் குண்டு வீசித் தாக்குதல்
கொழும்பு: வன்னிப் பகுதியில் உள்ள பூனேரி, பரந்தன் ஆகிய இடங்களில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 2 வயது குழந்தை உள்ளிட்ட ஐந்து அப்பாவித் தமிழர்கள் படுகாயமடைந்தனர்.
ஆனால் இந்தத் தாக்குதலில் பரந்தனில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்பிரிவு மையம் மற்றும் பூனேரியில் உள்ள விடுதலைப் புலிகளின் படைப் பிரிவு ஆகியவை சேதமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இலங்கை படைகள், வன்னி பகுதியிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மன்னாரையும், பூனேரியையும் இணைக்கும் ஏ-32 நெடுஞ்சாலையைப் பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்த நிலையில், நேற்று பூனேரி, பரந்தன் ஆகிய பகுதிகளில் விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இதில் மனோகரன் விதுரன் (2) என்ற சிறுவன் உள்ளிட்ட ஐந்து அப்பாவிகள் படுகாயமடைந்தனர். குடியிருப்புகளைக் குறி வைத்து விமானப்படை தாக்கியதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயமடைந்த சிறுவன் விதுரனின் தாயார் ஒரு மாதத்திற்கு முன்புதான் இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்தார். நேற்று அவரது 30வது நாள் காரியம் நடந்தபோதுதான் விதுரன் குண்டு வீச்சில் காயமடைந்த துயரம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications