புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு தா.பாண்டியன், வீரமணி வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு. எனவே அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் நேரடியாக பேச முடியவில்லை. எனவே இலங்கை அரசு படைகளுடன் மோதிக் கொண்டிருக்கும் மறு தரப்பின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க வேண்டுகோளை விடுத்தது.

போராடி வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், குறிப்பாக விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் குறித்த கருத்தை வெளியிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டோம். இந்த செய்தியைக் கண்டவுடன் 7ம் தேதி இரவே இணையதளத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பாளர் பி.நடேசன் திட்டவட்டமான திலை வெளியிட்டுள்ளார்.

முதலில் தேவை போர் நிறுத்தமே என்பதை விடுதலைப் புலிகள் தொடக்கம் முதல் வற்புறுத்தி வருவதாக கூறும் நடேசன், இலங்கை அரசுதான் படை கொண்டு போரை நடத்தி வருகிறது. தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே தமிழ் மக்கள் போராடி வருகிறோம். எனவே இலங்கை அரசு போரை நிறுத்தினால் நாங்களும் தற்காப்பு போர் நடத்தி வருவதையும் நிறுத்தி விடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்பது தெளிவாகி விட்டது. எனவே இந்த அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு மக்களுக்கு எதிரான போரை பல நாட்டுப் படைகள், ஆயுதங்களின் உதவியுடன் இலங்கை அரசு நடத்தி வருகிறது. எனவே பொறுப்புள்ள ஒரு அரசு என்ற முறையில் இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அதை வலியுறுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழி காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் வேண்டும் உடன்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்பதுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு முன் வர வேண்டும் என்று இந்திய மக்கள், தமிழ் மக்கள், சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை தமிழ் மக்களின் மனித, அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுக்க உலக மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். தடைகளைத் தாண்டி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் உறுதி தந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது என்று கூறியுள்ளார்.

சாதகமான விளைவு - கி.வீரமணி

கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்தத்தி்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. முதல்வர் கருணாநிதி எடுத்த அயராத முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஏற்பட்ட சாதகமான விளைவு இது என்றே சொல்லலாம்.

13ம் தேதி நம்முடைய பிரதமரை சந்திக்க வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறி வற்புறுத்த வேண்டும். போர் நிறுத்தம், நிரந்தர அமைதி திரும்புதல் இவை பிரதமரால் வற்புறுத்தப்பட்டு அரசியல் தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+