சட்டசபை கூடியது-இளவரசன் மறைவுக்கு இரங்கல், ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. திருக்குறள் வாசித்து முடித்த பின்னர் திருமங்கலம் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீர.இளவரசன் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார்.
பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்துத இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் அறையில் நடந்தது. 5 நாட்கள் வரை அவை நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மின்சார பற்றாக்குறை-மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை வைத்து புயலைக் கிளப்ப அதிமுக உள்ளிட்ட கட்சிகள் காத்துள்ளன.
கடந்த கூட்டத் தொடரின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தற்போது அங்கு இல்லை.
பாமகவை திமுக வெளியேற்றி விட்டது. இடதுசாரிகள், தாங்களாகவே திமுக எதிர்ப்பு நிலைக்கு மாறி விட்டனர். காங்கிரஸ் மட்டுமே திமுக அணியில் உள்ளது. இருப்பினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸும் சில கடுமையான நிலையை கையாண்டு வருவதால், இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால் இடதுசாரிகள் அதை ஆதரிக்கக் கூடும். ஆனால் தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என பாமக தெரிவித்து விட்டது. எனவே திமுக அரசுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நம்பப்படுகிறது.
கூட்டத்தொடரில் தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஆணையம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டதிருத்த ஆணை, விற்பனை வரிச் சட்டம் உள்ளிட்ட 10 அவசர சட்ட ஆணைகளுக்கான சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
பரபரப்பான சூழலில் கூடும் இந்தக் கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக கண்டனம்:
இதற்கிடையே, நடப்பு உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது விவாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் வீர. இளவரசனுக்கு இரங்கல் தெரிவிப்பதில் அந்த மரபு கடைப்பிடிக்கப்படவில்லை என்று மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளி வரை கூட்டத் தொடர்:
முன்னதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை வெள்ளிக்கிழமை (14.11.2008) வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications