போலீஸ் சித்திரவதை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ 20,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
அரியலூர்: போலீஸ் கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம, பாபநாசேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்திடம் செல்வராஜ் இது குறித்து புகார் கொடுத்தார். அதில், 2002- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எனது வீட்டுக்கு பெரம்பலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகுரு வந்தார்.
அவர் எனது சகோதரர் அருள்ராஜூஐ சொத்துத் தகராறு பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அவரை அடித்து உதைத்து சித்தரவதை செய்தார்.
மேலும், என்னை ஒரு நாள் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி வெங்கடாசல மூர்த்தி, உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவி்ல் நீதிபதி தனது உத்தரவில், சொத்து தகராறு காரணமாக செல்வராஜை போலீஸ் காவலில் வைத்து துன்புறுத்தியதற்காக அவருக்கு தமிழக அரசு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இந்தப் பணத்தை தவணை முறையில் பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகுருவிடம் வசூலிக்க வேண்டும்.
அத்துடன் சரக டி.ஐ. ஜி., பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications